கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாது என்று எண்ணி ஆயுதக்குழுக்களுடன் இணைந்து அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது. இந்நிலையில், மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
மன்னார் தட்சணாமருதமடுப் பகுதியில் சிறிலங்கா இராணூவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் நான்கு அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள தமிழ் மாவட்டங்களில் கடந்த இருபது வருடங்களில், யாழ். மாவட்டத்தில் தான் மொத்த குடிப்பரப்பில் முப்பது சதவீதமான வீழ்ச்சி காணப்படுவதாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா படையினரின் ஆழஊடுருவும் அணியினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இரு வேறுபகுதிகளில் பொருத்திய கிளைமோர் வெடித்ததில் எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
மட்டக்களப்பில் இன்று உள்ளூராட்சித் தேர்தல்; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு பதற்றம், பீதிக்கு மத்தியில் நடைபெறுகிறது
[Monday March 10 2008 12:47:52 PM GMT]
[யாழினி]
மட்டக்களப்பு மாநகரசபை உட்பட 9 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை நடைபெறுகின்றது. தேர்தலுக்கான அனைத்து செயற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் நேற்றுத் தெரிவித்தார்.
மொத்தம் உள்ள 385 வாக்களிப்பு நிலையங்களுக்கும் இடம்பெயர்ந்த வாக்காளருக்கென அமைக்கப்பட்டுள்ள 6 வாக்களிப்பு நிலையங்களுக்கும் இன்று காலை வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்படும். அதற்கான ஒழுங்குகள் மற்றும் வாகன வசதிகள் தயாராக உள்ளன என்றும் உதவித் தேர்தல் ஆணையாளர் மேலும் கூறினார்.இன்று வாக்களிப்பு நடைபெறவுள்ள பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தேர்தல் சீராக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வன்முறைகள், அச்சுறுத்தல்கள், பதற் றம் ஆகியவற்றுக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இன்றைய தேர்தலில் வாக்களிக்க உள்ளனர் என்று சுயாதீனத் தகவல்கள் தெரிவித்தன.விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றிய இப்பகுதியில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டத் தேர்தல் அவசியமென அரசு தெரிவித்துள்ளது.
எனினும், கிழக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டிவிட்டதாகக் காண்பிப்பதற்காக அரசு அரசியல் பொறுப்பற்ற விதத்தில், அவசர அவசரமாகத் தேர்தல்களை நடத்துவதாக மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவிக்கின்றன.
வன்முறையும், மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்களும் தேர்தல் முடிவைப் பாதிக்கும் என அவை அச்சம் வெளியிட்டுள்ளன.
அரசு கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டதிலிருந்து அப்பகுதியில் வன்முறையும் குழப்பமும் தொடர்ந்து நீடிக்கின்றன.அப்பகுதியில் நிலைமை முழுமையாகத் திருப்திகரமானதாகக் காணப்படாவிட்டாலும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்குத் தேர்தல் மிக முக்கியமான நடவடிக்கையென அரசின் தேசியப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்."மட்டக்களப்பில் தற்போது ஜனநாயகம் காணப்படுகின்றது. இது மிகவும் முக்கியமான நடவடிக்கை, நடமாட்ட சுதந்திரம் தற்போது காணப்படுகின்றது.' எனக் குறிப்பிடும் அவர் சில மாதங்களுக்கு முன்னர் அப்பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் காணப்பட்டதையும் சுட்டிக்காட்டுகின்றார்.
எனினும், மனித உரிமை அமைப்புகள் நீதியான தேர்தல் அங்கு சாத்தியமேயில்லை என்கின்றன. எதிர்த்தரப்பால் தாக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக சில வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபடவில்லை எனவும் அவை தெரிவிக்கின்றன.
ஆயுதக் குழுக்கள் உள்ளூர் அதிகாரிகளை அச்சுறுத்தி அவர்களைத் தேர்தலில் போட்டியிடச் செய்துள்ளன என்றும் தெரிவிக்கும் இந்த அமைப்புகள், இதன் காரணமாக வேட்பாளர்கள் குறித்து சுதந்திரமாகத் தெரிவுசெய்வதற்கான சந்தர்ப்பமில்லை என்றும் கூறுகின்றன.